சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், மேலும் பல பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதிய 2338/54 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை பற்றிக் கலந்துரையாடும்போதே, இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய 15% ஆக இருந்த வரி விகிதத்தை 5% ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கிய குழு, இவ்வர்த்தக ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் சாத்தியக்கூற்று ஆய்வு நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இவ்விடயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய குழுவின் தலைவர், இந்த ஒப்பந்தம் குறித்த தர்க்கரீதியான விடயங்களை முன்வைத்து,06 வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிக்குப் பணிப்புரை விடுத்தார்.
1962 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 2336/ 72 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரண்டாவது தடவையாகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், இந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளைக்கு அனுமதி வழங்குவதில்லையெனக் குழு தீர்மானித்தது.