பாலியல் வழக்கில் இருந்து சிட்னி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ் குணதிலக்க சுமார் ஓர் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை திரும்பியுள்ளார்.
குணதிலக்க தான் நாடு திரும்புவதற்காக விமானத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அவர் நேற்று (03) இரவு 11 மணி அளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சிட்னியில் பெண் ஒருவர் மீது பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட குணதிலக்க மீதான வழக்கின் தீர்ப்பு சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹுக்கட்டினால் கடந்த வாரம் வழங்கப்பட்டது. அதில் குணதிலக்க மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் நிரபராதி என்றும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
எனினும் இலங்கை அணிக்காக எட்டு டெஸ்ட் உட்பட 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கும் குணதிலக்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபையால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அணியுடன் சென்றிருந்தபோதே குணதிலக்க பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை அவர் மீது தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, குணதிலக்க மீதான தற்காலிக தடையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை முன்னதாக தெரிவித்திருந்தது.
“நிறைவேற்றுக் குழு இந்த வாரம் கூடி முடிவெடுக்கவுள்ளது. அதன் பின் தடை நீக்கப்பட்டு அவர் மீண்டும் இலங்கையில் கிரிக்கெட் ஆட முடியுமாக இருக்கும்” என்று இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.