கொழும்பு மேற்கு றோட்டறிக் கழகம் மற்றும் தமிழக றோட்டறிக் கழகங்களின் உதவியுடன் மன்னார், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமியொருவர் தமிழகத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (02) தனது வசிப்பிடத்துக்கு திரும்பியுள்ளார்.
மேரி ஹெனாலி பெர்னாண்டோ எனும் சிறுமிக்கே தமிழகத்தில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த செப்டெம்பர் 6ஆம் திகதி தனது பெற்றோருடன் கொழும்பு மேற்கு றோட்டறிக் கழகத்தின் பயண செலவில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், சிறுமியின் சிகிச்சைக்கான செலவை தமிழகத்திலுள்ள றோட்டறிக் கழகங்கள் பொறுப்பேற்றிருந்தன.
இவ்வாறான தேவையுடையவர்கள் மன்னார் றோட்டறிக் கழகத்தை தொடர்பு கொள்வதன் மூலம் சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் விசேட நிருபர்