யாழ். காங்கேசன்துறை, மாங்கொல்லை பிரதேசத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இடங்களிலுள்ள காணிகளை வேலி அடைத்து அறுக்கைப்படுத்துவதற்கான அனுமதி அங்குள்ள காணி உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் (02) வழங்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பழை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 33 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த மாங்கொல்லை பிரதேசத்திலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், மாங்கொல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரையில் மீள்குடியேறாத போது, மாங்கொல்லையிலுள்ள வீடுகளில் இரும்பு உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இது தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்திடமும் காங்கேசன்துறை பொலிஸாரிடமும் மாங்கொல்லை பிரதேச மக்கள் பல தடவைகள் முறைப்பாடு செய்தனர்.
அத்துடன், தெல்லிப்பழை பிரதேச செயலகத்திடம் தமது காணிகளுக்கு வேலி அடைத்து அறுக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு காணி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, தமது காணிகளுக்கு வேலி அடைக்க தெல்லிப்பழை பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, மாங்கொல்லை வைரவர் ஆலயத்தில் திருத்தப்பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்துக்கு மின்சார இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யாழ். விசேட நிருபர்