நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும், முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளிலும் நாளை (04) மீலாத் நபி விழா கொண்டாடப்படவுள்ளது. சமய விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் நாளை (04) புதன்கிழமை மீலாத் நபி விழாவை கொண்டாடுமாறு வலியுறுத்துவதாக,கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் என்.என். மலவிஆராச்சி தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மீலாத் விழாவைக் கொண்டாடுவதனூடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் சௌபாக்கியம் கிடைக்க
பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிபர்கள் இவ்விடயம் பற்றி சகல ஆசிரியர்களுக்கும் கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்துவது அவசியம்.பாடசாலையில் மீலாத் விழா நடத்தப்படும் விதம் தொடர்பாகத் தீர்மானித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவித்தல் அவசியம். இவ்விழாவில் மதகுருமார், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்தவர்களைப் பங்குபற்றச் செய்ய வேண்டும். கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இவ்விழா நடத்தப்படுவது அவசியம். இவ்வாரத்தில் பாடசாலை, பாடசாலைச் சூழல் சுத்தம் செய்யப்பட்டு, இஸ்லாமியக் கலை அம்சங்களுடன் நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப்படுதல் சாலச் சிறந்ததாகும்.
தேசிய ரீதியில் ஒரே நாளில், மீலாத் விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)