Friday, March 29, 2024
Home » இலங்கையின் பதக்க எதிர்பார்ப்புடைய இரு மெய்வல்லுனர் போட்டிகள் இன்று
ஆசிய விளையாட்டுப் போட்டி:

இலங்கையின் பதக்க எதிர்பார்ப்புடைய இரு மெய்வல்லுனர் போட்டிகள் இன்று

by sachintha
October 3, 2023 9:40 am 0 comment

ஆசிய விளையாட்டு போட்டியின் இலங்கையின் இரு பதக்க எதிர்பார்ப்பான பெண்களுக்கான 800 மீற்றர் மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகள் இன்று (03) சீனாவின் ஹான்சோ நகரின் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி காலை 6.50க்கு ஆரம்பமாகும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயந்திகா அபேரத்ன மற்றும் தருஷி கருணாரத்ன போட்டியிடவுள்ளதோடு கயந்திகா ஆரம்ப சுற்றின் இரண்டாவது போட்டியிலும் தருஷி மூன்றாவது போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

அதற்கு முன்னர் நதீஷா லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை நேரப்படி 5.40க்கு போட்டியிடவுள்ளார். ஆண்கள் அஞ்சலோட்ட அணி காலை 7.20க்கு ஆரம்பமாகும் ஆரம்ப சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்கேற்பதோடு இலங்கை அஞ்சலோட்ட அணியில் அருண தர்ஷன, காலிங்க குமார, ராஜித்த ராஜகருணா, பசிந்து கொடிகார மற்றும் தினுக தேஷான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பொன்று நேற்று முன்தினம் (01) பறிபோனது. பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற கயந்திகா ரத்னாயக்க நான்காவது இடத்தை பெற்றார். எனினும் அவர் 4:18.77 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து இந்த போட்டி நிகழ்ச்சியில் இலங்கை வீராங்கனை ஒருவரின் சிறந்த காலத்தை பதிவு செய்தார்.

இதற்கு முன்னர் 1998இல் பாங்கொக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோஷனி சமரகோன் 4:35.00 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்ததே சிறந்ததாக இருந்தது.

இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியின் பெட்மின்டன் போட்டியில் பங்கேற்றிருக்கும் ஒரே வீரரான விரேன் நெத்தசிங்க நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் 64 பேர் சுற்றில் பங்கேற்று பூட்டானின் அனிஷ் குருங்கை 2–0 என தோற்கடித்தார். அவர் இன்று 32 பேர் சுற்றில் விளையாடவுள்ளார்.

ஸ்குவஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 16 வீரர்கள் சுற்றுக்கு தகுதி பெற்ற ரவிந்து லக்சிறி மலேசியாவின் எடீன் இட்ரக்கி உடன் போட்டியிட்டதோடு அதில் அவர் தோல்வியை சந்தித்தார். இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் பி குழுவில் போட்டியிடும் இலங்கை அணி நேற்று பிலிப்பைன்ஸுக்கு எதிரான போட்டியில் 2–1 என தோல்வியை சந்தித்தது. இலங்கை அணி இன்று சீனாவை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை அம்பெறிதல் கம்பெளண்ட் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 32 பேர் சுற்றில் போட்டியிட்ட சஞ்ஜீவ வசந்த குமார மொகோலிய வீரரை தோற்கடித்து 16 பேர் சுற்றுக்கு தகுதி பெற்றார். என்றாலும் 16 பேர் சுற்றில் சீன தைபே வீரரை எதிர்த்தாடிய சஞ்ஜீவ தோல்வியை சந்தித்தார்.

அம்பெறிதல் போட்டியின் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட அனுராதா கருணாரத்ன ஐக்கிய அரபு இராச்சிய வீராங்கனைக்கு எதிராக 135–127 என வெற்றியீட்டியபோதும் 16 பேர் சுற்றில் இந்திய வீராங்கனையிடம் தோல்வியை சந்தித்தார்.

நேற்று ரிகர்வ் ஆடவர் பிரிவின் இறுதி 32 பேர் போட்டியில் பங்கேற்ற சஜீவ் டி சில்வா கசகஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்தார். இதன்படி இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் அம்பெறிதலில் இலங்கையின் பங்கேற்பு பதக்கம் எதுவும் இன்றி முடிவுக்கு வந்தது.

இதேவேளை இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பான ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் ஆட்டத்தின் காலிறுதி போட்டி இன்று (03) ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப சுற்றில் போட்டியிட்ட நேபாளம், ஹொங்கொங் மற்றும் மலேசியா இந்த சுற்றுக்கு தகுதி பெற்றதோடு ஐ.சி.சி தரப்படுத்தலில் முன்னணியில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் காலிறுதி சுற்று தொடக்கம் போட்டியிடவுள்ளன.

இன்று முதல் காலிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதவிருப்பதோடு இரண்டாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இலங்கை தனது காலிறுதிப் போட்டியில் நாளை (4) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT