மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க கத்தோலிக்க ஆலயமான அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 15 ஆம் திகதி பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து நவ நாள் ஆராதனை மற்றும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமை மாலை நற்கருணை ஆராதனை வழிபாட்டுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.
விசேட திருவிழா கூட்டுத் திருப்பலியை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைத்து ஒப்புகொடுத்திருந்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச்சொரூப ஆசீருடன் கொடியிறக்கம் இடம்பெற்றது. கப்பலேந்தி அன்னையின் திருச் சொரூபம் வாவியில் கொண்டு செல்லப்பட்டு வாவி ஆசீர்வதிக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவான விசுவாசிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல், படங்கள்: கல்லடி குறூப் நிருபர்