மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களாக என்னுடன் கடமை புரிந்த உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பினால் செவ்வனே எனது மக்கள் பணியை நான் மாவட்டத்திற்காக ஆற்ற முடிந்திருந்தது, அதனால் மனநிறைவுடன் எனது 32 வருட அரச பணியில் இருந்து ஓய்விற்கு செல்கின்றேன் என மட்டக்களப்பில் ( இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.
32 வருடங்கள் அரச சேவையை பூர்த்தி செய்து அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு (27) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வொன்று இடம்பெற்றது.
1991 ஆம் ஆண்டு அரச நிருவாக சேவையில் தனது அரச பணியை தொடங்கிய திருமதி கலாமதி பத்மராஜா, அம்பாறை மாவட்டத்தில் தமது முதல் நியமனத்தை பெற்று கடமையை ஆரம்பித்ததுடன், பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளராக நியமனம் பெற்று தமது கடமையினையாற்றியுள்ளார். 2020 ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமைப் பொறுப்பினை ஏற்று பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் இடமாற்றலாகி மாகாண சபையில் கடமையாற்றி, இவ்வாண்டு தை மாதம் 17 திகதி முதல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவை அங்கிகாரத்துடன் மீளவும் நியமிக்கப்பட்டு செவ்வனே தமது கடமையினை மாவட்ட மக்களுக்காக ஆற்றிவந்த நிலையில் எதிர்வரும் 29 ஆந் திகதி தமது 60 வயதினை பூர்த்தி செய்து அரச சேவையில் இருந்து ஓய்விற்கு செல்லவுள்ள நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரான இவரின் சிறந்த சேவையினை பாராட்டி பிரியாவிடையளிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சனி சிறிகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உயர் அரச அதிகாரிகள், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு ஒய்வு பெறவிருக்கும் அரச அதிபரின் சேவையினை வாழ்த்தியதுடன் அரச அதிபரிற்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலைகள் அணிவித்து கௌரவமளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்