Friday, March 29, 2024
Home » முதல் அரையாண்டு வரிக்கு முந்திய இலாபம் 44% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அமானா வங்கி

முதல் அரையாண்டு வரிக்கு முந்திய இலாபம் 44% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அமானா வங்கி

by Rizwan Segu Mohideen
September 6, 2023 3:33 pm 0 comment

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியிலும், அமானா வங்கி தொடர்ச்சியாக உயர்ந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. மீளாய்வுக்குட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 802.8 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 556.9 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், நடப்பு ஆண்டில் இந்தப் பெறுமதி 44% உயர்ந்துள்ளது. சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலிலும், மீண்டெழுந்திறனுடனான செயற்பாடுகளின் காரணமாக, இரண்டாம் காலாண்டில் மாத்திரம் வங்கி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரிக்கு முந்திய இலாபமாக, 122% வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 379.4 மில்லியனாக பதிவு செய்திருந்தது. உயர் வரி அறவீடுகள் காணப்பட்ட போதிலும், முதல் அரையாண்டு காலப்பகுதியில் வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 419.6 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 16% உயர்வாகும். இரண்டாம் காலாண்டில், வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 111.3 மில்லியனிலிருந்து ரூ. 198.9 மில்லியனாக 79% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

2023 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தனது உறுதியான இலாபகரச் செயற்பாட்டை வங்கி தொடர்ந்தும் பேணியிருந்தது. இக்காலப்பகுதியில் நிதிசார் வருமானம் ரூ. 4.85 பில்லியனிலிருந்து 80% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 8.75 பில்லியனாக உயர்வடைந்திருந்தது. இதில், உரிய நேரத்தில் நிதிப் பிரயோகம் மற்றும் முற்பணங்கள் மற்றும் பொறுப்புகளின் மீள்-விலையிடல் போன்றவற்றை மேற்கொண்டிருந்தமை போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. இதன் பெறுபேறாக, வங்கியின் நிதியளிப்பு எல்லைப் பெறுமதி 3.6% இலிருந்து 4.8% ஆக உயர்ந்திருந்தது. முதல் அரையாண்டில் தேறிய நிதியளிப்பு வருமானம் ரூ. 3.36 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 68% வருடாந்த அதிகரிப்பாகும்.

வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் 66% எனும் பெறுமதியால் உயர்ந்து ரூ. 4.47 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம் மற்றும் தேறிய வியாபார வருமானம் ஆகியன முறையே ரூ. 474.4 மில்லியன் (66% வருடாந்த வளர்ச்சி) மற்றும் ரூ. 622.9 மில்லியன் (47% வருடாந்த வளர்ச்சி) பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. பொருளாதார தாக்கங்களினால் பாதிப்படக்கூடிய வியாபாரங்களின் இடர்களை தணிப்பதற்காக உயர்ந்தளவு மதிப்பிறக்க பெறுமதிகளை ஒதுக்கீடு செய்திருந்தமையால், மதிப்பிறக்க கட்டணங்கள் 191% இனால் அதிகரித்திருந்தது. வங்கியின் தேறிய தொழிற்பாட்டு வருமானம் 38% இனால் அதிகரித்து ரூ. 3.04 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2022 முதல் அரையாண்டு காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 2.19 பில்லியனாக காணப்பட்டது.

முதல் அரையாண்டு காலப்பகுதியில், நிதிச் சேவைகள் மீதான வற் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபத்தில் 57% எனும் உயர் வளர்ச்சியை வங்கி பதிவு செய்து, ரூ. 1.23 பில்லியனை எய்தியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 0.78 பில்லியனாக பதிவாகியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கான மொத்த பரிபூரண வருமானம் ரூ. 387.2 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 38% எனும் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

நெருக்கடியான திரள்வு நிலைகள் மற்றும் சந்தையில் நிதிக்கான போட்டி நிலவிய சூழலில், வங்கியின் மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரிக்கு அதிகளவு வரவேற்பு நிலவியதை வங்கி அவதானித்திருந்தது. அதன் காரணமாக, வாடிக்கையாளர் வைப்புகள் 2023 இன் முதல் அரையாண்டில் 9% வளர்ச்சியடைந்து ரூ. 122.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. 42% எனும் ஆரோக்கியமான CASA விகிதத்தை பேணியிருந்ததுடன், வாடிக்கையாளர் முற்பணங்கள் ரூ. 80.0 பில்லியனாக காணப்பட்டது.

உரிய காலத்தில் வாடிக்கையாளர் ஈடுபாடுகள் மற்றும் வினைத்திறனான முறையில் இலாகா முகாமைத்துவத்தினூடாக, வங்கி தனது நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு விகிதத்தை 2.2% ஆக, சந்தை சராசரியை விட குறைவான மட்டத்துக்கு முன்னேற்றியிருந்தது. 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 142.0 பில்லியனாக காணப்பட்டது. வங்கியின் மொத்த மூலதன விகிதம் 15.4% ஆக, ஒழுங்குபடுத்துனரின் தேவைப்பாட்டு பெறுமதியான 12.5% என்பதை விட உயர்வாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுபேறுகளின் காரணமாக, அமானா வங்கி புதிய LMD Brand Finance சிறந்த 100 இலங்கையின் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் 14 நிலைகள் முன்னேறியிருந்தது.

உரிமை வழங்கலினூடாக ரூ. 6.7 பில்லியனை பங்கு மூலதனமாக திரட்ட எதிர்பார்ப்பதாக வங்கி அண்மையில் அறிவித்திருந்தது. இதனூடாக, அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகள் கொண்டிருக்க வேண்டிய ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாடான ரூ. 20 பில்லியனை நிவர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் பங்குதாரர்களால் அனுமதியளிக்கப்பட்டதன் பின்னர், வங்கியினால் 2,902,267,365 சாதாரண வாக்குரிமைப் பங்குகள், ஏற்கனவே காணப்படும் 1 பங்குக்கு 1 புதிய பங்கு எனும் அடிப்படையில் பங்கொன்றுக்கு ரூ. 2.30 வீதம் வழங்கும். தனது நேர்த்தியான வினைத்திறனான செயற்பாடுகளினூடாக, தனது பங்குதாரர்களுக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், வங்கியினால் அண்மையில், பங்கொன்றுக்கு ரூ. 0.12 எனும் இடைக்கால மேலதிக பங்கு வழங்கல் அடிப்படையிலான பங்கிலாபத்தை வழங்குவதாக அறிவித்திருந்தது. இது வங்கியின் தொடர்ச்சியான 6ஆவது பங்கிலாபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கியின் முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் வங்கியின் சிறந்த வினைத்திறனான செயற்பாடுகள் என்பது, சவால்கள் நிறைந்த சூழலில் ஒப்பற்ற மீண்டெழுந்திறனுடன் செயலாற்றுகின்றமைக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எமது மக்களுக்கு நட்பான வங்கிச் சேவையை முன்னிலைப்படுத்தி, நெருக்கடி நிலையை சமாளித்திருந்தது மாத்திரமன்றி, இது வரை காலத்திலும் பதிவு செய்திருந்த சிறந்த காலாண்டு நிதிப் பெறுபேறுகளை எய்தியிருந்தோம். பொருளாதாரச் சூழல் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், எமது எதிர்பார்ப்புகள் தொடர்ந்தும் வளர்ச்சி காண்கின்றன. எமது இந்தப் பயணத்தில் முக்கிய பங்காற்றியிருந்தமைக்காக, எமது மதிப்பிற்குரிய பங்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்கால வாய்ப்புகள் தொடர்பில் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம்.” என்றார்.

வங்கியின் வினைத்திறன் தொடர்பில் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “தற்போதைய பெரும் பொருளாதார நெருக்கடிச் சூழலில், எமது உறுதியான மத்திய ஆண்டு பெறுபேறுகளினூடாக, வங்கியின் உறுதித் தன்மை, மீண்டெழுந்திறன் மற்றும் தொடர்ச்சியான ஏற்றுக் கொள்ளல் போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எமது மக்களுக்கு நட்பான வங்கிச் செயற்பாடுகளினூடாக, எமது வாடிக்கையாளர்களின் நிதிசார் நலனை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கான வங்கியின் அர்ப்பணிப்பு இந்த சாதனையினூடாக மீளுறுதி செய்யப்பட்டுள்ளது. எனது சக பணிப்பாளர்கள், முகாமைத்துவம், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவு, நம்பிக்கை மற்றும் பற்றுறுதி போன்றவற்றுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஆண்டின் எஞ்சியிருக்கும் காலப்பகுதியிலும் உறுதியான பயணத்தை முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT