கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் ஒழுங்கு செய்த மீலாத் தின நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் முஸ்லிம் சலாஹுத்தீன் தலைமையில் (28) பள்ளிவாசலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாழும் மூவின வறிய 3000 குடும்பங்களுக்கு தலா 3000 ரூபா பெறுமதியான 3000 உணவுப்பார்சல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவா்களுக்கும் இந்நிகழ்வின்போது பிரதமரினால் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பிரதமர், இன்றைய தினம் நபி முஹம்மத் (ஸல்)
அவர்கள் பிறந்த தினத்தில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
இப்பள்ளிவாசல் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கலீல் ஹாஜியார் இப் பள்ளிவாசலின் சொத்துப் பிரச்சினை சம்பந்தமாக என்னை அடிக்கடி சந்தித்து உரையாடியுள்ளார். அப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முயற்சிப்பதாகவும் பிரதமர் இதன்போது கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌசி , யதாமின் குணவர்த்தன உட்பட முன்னாள் தூதுவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
(அஷ்ரப் ஏ சமத்)