தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று தமிழக தலைவர்களுடன் கலந்துரையாடி, உண்மையான நிலைமையை புரியவைக்க வேண்டும். இதற்கு சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்களென, தாம் நம்புவதாக கடற்றொலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..
தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக முயற்சித்து வருகின்ற போதிலும், இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லையெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று புதன்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு, கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்தும், செயற்பாட்டை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர். கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த, கடந்த 20 வருட காலமாக, தன்னால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் குறித்த அத்துமீறலை கட்டுப்படுத்த பல பேச்சுவார்த்தைகளை கச்சதீவு பகுதியில் ஏற்பாடு செய்திருந்தோம்.அதில், நான் கலந்து கொண்டேன். ஆனால் எவ்விதமான முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.