ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த சில வாரகாலமாக பெய்த கடும் மழையினால் திஸ்ஸமகாராம பிரதேச விவசாய நிலங்களில் சுமார் 15,000 ஏக்கரில் மேலதிக பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்பட்டுவந்த பயறுச் செய்கை முற்றாக பாதிக்கப்பட்டு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பயறுசெய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களில் நீர் நிரம்பி வழிந்தோடாமல் தேங்கி நின்றதன் காரணமாக பயறு செடிகள் முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டு அழிவிற்குள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் வருடத்தில் ஒக்டோபர் மாதம் வரையில் மழை பெய்யாதென வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்ததனைத் தொடர்ந்து மேலதிக பயிர்ச் செய்கையாக விவசாயிகள் தங்களது வயல் நிலங்களில் பயறு செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் மேலதிக பயிர்செய்கையாக பயறு பயிரிடப்பட்டு வந்த நிலையில், விவசாயிகள் 1 கிலோ பயறு விதையினை சுமார் 1150 ரூபாவிற்கு கொள்வனவு செய்திருந்தனர். கடந்த காலங்களில் சந்தையில் பயறிற்கு அதிகவிலை காணப்பட்டதினாலும் நீர் குறைந்தளவு தேவைப்படுவதினாலும் விவசாயிகள் பயறை பயிரிட நடவடிக்கை எடுத்திருந்தனர். இருந்தாலும் முற்றிலும் எதிர்பாராதவிதமாக பெய்த அதிக மழையின் காரணமாக பயிர்ச்செய்கை முற்றாக பாதிப்படைந்து நஷ்டமேற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்