ஜெர்மனியில் நடைபெறவுள்ள பெர்லின் குளோபல் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளை ஜெர்மனிக்கு பயணமாகவுள்ளார்.
கியூபாவில் நடைபெற்ற ஜி77 மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடர் ஆகியவற்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி நேற்றைய தினம் தமது பயணத்தை முடித்து நாடு திரும்பினார்.
இந்நிலையில்,ஜெர்மனியில் நடைபெறவுள்ள பெர்லின் குளோபல் பேச்சு வார்த்தையில் பங்கேற்க அவர் செல்கிறார். தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தையாக இது அமையவுள்ளது. இக்கருத்தரங்கின் முதலாம் நாள் அரச தலைவர்களின் பேச்சுவார்த்தை அமர்வின் ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது ஜெர்மனியின் சான்செலர் ஒலாப் சோல்ஸ் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் வர்த்தக துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி பேச்சுவார்த்தைகளில் ஜெர்மனிய சான்செலர் ஒலாப் சோல்ஸ், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்ள்ஸ் மைக்கல் மற்றும் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸான்டர் டி குரோ ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.