கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கிழக்குப் பல்லைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து கிழக்கின் ஓவியத் திருவிழாவை நடத்தின. இந்த ஓவியத்திருவிழா மூன்று தினங்கள் நடைபெற்று நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நிறைவடைந்தது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த ஓவியத் திருவிழா நடைபெற்றது. கடந்த 21 ஆம் திகதி ஆரம்ப நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் மவர்ச்செல்வன் ஓவியத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். இதில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி, கட்புல கலைத்துறைத் தலைவர் பிரகாஷ், கலாநிதி சு.சீவரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் இறுதி நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்த ஓவியத் திருவிழாவை மூன்று தினங்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவடங்களிலுள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சுமார் பத்தாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
கிழக்குப் பல்லைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இங்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை வரைந்துள்ளனர். இந்த ஓவியங்களில் சிலவற்றை பணம் செலுத்தி சிலர் வாங்கியும் சென்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் திறந்தவெளியில் ஓவியத் திருவிழா நடைபெற்றமை இதுவே முதற் தடவையென மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் மவர்ச்செல்வன் தெரிவித்தார்.
இறுதிநாளிலும் பெருமளவிலானோர் இந்த ஓவியத் திருவிழாவை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)