சீனாவின் ஹாங்சு நகரில் நேற்று (22) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான கிரிக்கெட் ஆட்டத்தின் காலிறுதியில் தாய்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
கடந்த வியாழக்கிழமை கடும் மழைக்கு மத்தியில் இரண்டு போட்டிகள் கைவிடப்பட்ட சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையிலேயே நேற்றைய ஆட்டம் இடம்பெற்றது. மழை குறுக்கிட்ட போதும் அணிக்கு 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தாய்லாந்து அணி மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்டங்களை அதிகரிக்க தவறியது. அந்த அணி 15 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களையே பெற்றது.
மத்திய பின் வரிசையில் வந்த சனிதா சுதிருவாய் 31 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எந்த வீராங்கனையும் இரட்டை இலக்கங்களை பெறவில்லை. சுழற்பந்து வீராங்கனை இனோஷி பிரியதர்ஷனி அதிரடியாக 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர் அணிக்கும் அணித்தலைவி சாமரி அத்தபத்து 21 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றதோடு அனுஷ்கா சஞ்சீவனி 23 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 32 ஓட்டங்களை குவித்தார்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 10.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 84 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இதன்படி இலங்கை மகளிர் அணி அரையிறுதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அரையிறுதியில் வெல்லும் பட்சத்தில் இலங்கை அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் அல்லது வெள்ளி பதக்கங்களில் ஒன்றை வெல்வது உறுதியாகிவிடும்.