தனியான ம. உ. ஆணையாளர் நியமன யோசனைக்கு இலங்கை எதிர்ப்பு
தனியான ம. உ. ஆணையாளர்
நியமன யோசனைக்கு
இலங்கை எதிர்ப்பு
கே. அசோக்குமார்
பொதுநலவாயத்துக்கு மனித உரிமைகள் தொடர்பாக தனியான ஆணையாளர் ஒருவரை நியமிக்க
வேண்டும் என்ற ஆலோசனைக்கு இலங்கை எதிர்ப்பை தெரிவித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி
சில்வா நேற்று தெரிவித்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் குழு அறையில் நேற்று மனித உரிமைகள்
தொடர்பான விசேட ஆணையாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக அமர்வு நடைபெற்றது. இந்த
அமர்வின் போது பொதுநலவாய நாடுகளுக்கும் மனித உரிமைகள் தொடர்பான விசேட ஆணையர் ஒருவரை
நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான ஒரு ஆணையாளர்
நியமிக்கப்படும் போது இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இறைமைக்கு அச்சுறுத்தலாக
அமையும் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு இவ்வாறான ஒரு விசேட ஆணையாளர் இருப்பதால்
பொதுநலவாய நாடுகளுக்கு அவசியமில்லை என்பதை எடுத்துக் கூறியதாக அமைச்சர் நிமால்
சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சி நிரலிலும்
இவ்விடயம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அடுத்து நடைபெறவிருக்கும் பொது
நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஆராய்வதென முடிவு செய்யப்பட்டதாகவும்
அமைச்சர் நிமல் கூறினார். மனித உரிமைகள் தொடர்பாக விசேட ஆணையாளர் நியமிப்பது
தொடர்பான அமர்வின் போது அவுஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன்
ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் ஆகியோர்
ஆலோசனைக்கு ஆதரவாக பேசினார்கள்.
எனினும் ஆளும்தரப்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கலாநிதி சரத்
அமுனுகமவுடன் ஏனையோர் எதிராக பேசினர்.
அரச தரப்பில் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமாரும் கலந்து
கொண்டுள்ளார்.