ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 18
நந்தன வருடம் ஆடி மாதம் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,AUGUST, 07, 2012
வரு. 80 இல. 186
 
தீர்வு எட்டப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியில்லை

இஸட் புள்ளி விவகாரம்:

தீர்வு எட்டப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியில்லை

மானியங்கள் ஆணைக்குழு உச்சநீதிமன்றத்துக்கு அறிவிப்பு

இஸட் புள்ளிகள் (z-score)  தொடர்பான விவகாரத்திற்கு முடிவு எட்டப்படும் வரையில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் பணியானது பொதுவாக ஒவ்வொரு வருடத்திலும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறுவதுடன், இந்த ஆண்டிலே அப்பணியை ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சார்பாக உச்ச நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.

எனினும், இஸட் புள்ளிகள் விவகாரத்திற்கு தீர்வொன்று எட்டப்படும் வரையில் அதனை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு சுட்டிக்காட்டியதை அடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மேற்படி உறுதிமொழியை பெற்றுக்கொடுத்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க இஸட் புள்ளிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயற்பட தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், அதிகாரிகளின் இவ்வாறான தவறுகள் காரணமாக இந்நாட்டுப் பரீட்சை முறைமை தொடர்பாக மாணவர்கள் நம்பிக்கை இழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளிகள் கணிக்கப்பட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட வேண்டும் என தெளிவாக நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான புள்ளிகளை கணிப்பிடும்போது மேற்படி இரண்டு பிரிவினரையும் ஒரே பிரிவினராக கவனத்திற்கொண்டு செயற்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் பாரிய தவறிழைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் அதுபற்றி சட்டமா அதிபர் ஊடாக மனு ஒன்றினை சமர்ப்பித்து அதுபற்றி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய போதிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வானது அவ்வாறு செய்வதற்கு தவறி யுள்ளதாகவும் பிரதம நீதியரசர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் வெளியான இஸட் புள்ளிகள் மூலம் தமக்கு அநீதி இழைக் கப்பட்டுள்ளதாக தெரிவித்து மாணவர்கள் சிலர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த போது இவ்வாறு குறிப்பிட்ட பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கேற்ப பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயற்பட்டுள் ளதா என சட்டமா அதிபரிடம் கேள்வி எழுப்பினார்.

அதன்போது வழக்குத் தீர்ப்பு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு பூரண விளக்கம் இருக்கவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அண்மையில் வெளியான இஸட் புள்ளிகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயமான தீர்ப்பு ஒன்றினை வழங் குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணாந்து தெரிவித்தார்.

அவ்வாறான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். எவ்வாறாயினும் மாணவர்களை இரண்டு பிரிவினராக கருதி இஸட் புள்ளிகள் வெளியிடப்படும் பட்சத்தில் அனைத்து மாணவர்களையும் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதிப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட் டினார். எனினும், இப்பிரச்சினைக்கு துரிதமாக தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் வெளியான இஸட் புள்ளிகளின் தேசிய மட்டத்திலான மாவட்ட மட்டத்திலான நிலையை (ஞிank) இரத்துச் செய்யுமாறு மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி மேற்படி மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற வுள்ளது.

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, கே.ஸ்ரீபவன், எஸ்.ஐ. இமாம் ஆகிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் மேற் படி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய 33 மாணவர்கள் மேற்படி மனுவைத் தாக்கல் செய்தனர். பரீட்சைகள் ஆணையாளர், பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் இதில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

பழைய இஸட் புள்ளிகள் மற்றும் பதிய இஸட் புள்ளிகள் என்பவற்றின் மூலம் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக நியாயமான இஸட் புள்ளிகள் திட்ட மொன்றினை அறிமுகம் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்த ரவிடுமாறு மேற்படி மனுவின் மூலம் உச்சநீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.

தமக்கு முன்னர் கிடைக்கப்பெற்றிருந்த பல்கலைக்கழக அனுமதிக்கான சந்தப்பம் பின்னர் வெளியிடப்பட்ட இஸட் புள்ளிகள் மூலம் வழங்கப்படவில்லை எனவும், அதன் மூலம் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மனநிலை தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் மேற்படி மனுவில் மேலும் குறிப் பிடப்பட்டுள்ளது.

அதன் மூலம், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இஸட் புள்ளிகள் விவகாரத்திற்கு நியாயமான தீர்வொன்று எட்டப்படும்வரை பல்க லைக்கழக அனுமதி உள்ளிட்ட நடவடிக் கைகளை இடைநிறுத்துமாறு மேற்படி மனுவின் மூலம் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். சட்ட த்தரணி சாலிய பீரிஸ் மனுதாரர்கள் சார்பாக ஆஜரானார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி