ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,AUGUST, 03, 2012
வரு. 80 இல. 183
 

நோன்பு துறப்பதை விரைவுபடுத்துவோம்!

நோன்பு துறப்பதை விரைவுபடுத்துவோம்!

“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார். புகாரி: 1957

“ஆரம்ப நேரத்தில் (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்’ என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல் திர்மிதி.

பள்ளிவாசல்களில் சென்று நோன்பு துறப்பதை வழமையாகக் கொண்டவர்களில் சிலர் மிகவும் தாமதமாகச் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களில் பலருக்கு இஃப்தார் கிடைப்பதில்லை. காரணம் பள்ளிவாசல்களில் தயார் செய்யப்படும் இஃப்தார் உணவுகள் முன்கூட்டியே தீர்ந்து விடுவதற்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

அவ்வாறு தீர்ந்துவிட்டால் இத்தனை பேருக்குக் கொடுத்து இவர்களுக்குக் கொடுக்க முடியாத நிலை எற்பட்டு விட்டதே என்ற மனக் கவலை உணவு ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்படுகிறது.

அதனால் இஃப்தாரை விரைவுபடுத்தும் அம்சங்களில் பள்ளிவாசல்களுக்குச் சென்று நோன்பு துறப்பவர்கள் முன்கூட்டியே சென்று அமர்ந்து கொண்டு அல்லாஹ் தங்களுக்கு விதியாக்கிய அந்த உணவை அடைந்து கொள்ளலாம். அதனால் உணவு ஏற்பாட்டாளர்களுக்கோ பிறருக்கோ சிரமம் தராதவர்களாக ஆகலாம். பாங்கு சொல்லும் வரை குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற இறை நினைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்.

“ஆரம்ப நேரத்தில் (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்” என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய விதம் நோன்பு துறந்து சுன்னத்தை ஹயாத்தாக்கிய நற்செயலை செய்ததாகவும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய அடியார்களில் ஒருவராகவும் ஆக முடியும்.

வீடுகளில் இஃப்தாரை தயார் செய்யும் பெண்கள் முன்கூட்டியே தயார் செய்ய முயற்சிக்க வேண்டும். பலகாரம் ஆறிவிடும் என்ற காரணத்தால் பலர் தயார் செய்வதை தாமதப்படுத்துகின்றனர். சரியான நேரத்தில் நோன்பு துறக்க முடிவதில்லை. வக்தில் மஹ்ரிப் தொழுகையையும் தொழ முடிவதில்லை.

அதனால் வீடுகளிலும், ரூம்களிலும் நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்துவிட்டு பாங்கு சொல்லும் வரை குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற இறை நினைவுகளில் ஈடுபடலாம்.

அதனால் ஆரம்ப நேரத்தில், (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறிய விதம் நோன்பு துறந்து சுன்னத்தை ஹயாத்தாக்கிய நற்செயலை செய்ததாகவும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய அடியார்களில் ஒருவராகவும் ஆகமுடியும்.

இவற்றை விடவும் மேலாக இதுவரை நான் பசித்திருந்ததே அல்லாஹ்வுக்காகத் தான். இதுபோல எப்பொழுதும் நான் பசித்திருந்ததில்லை. அதனால் எனக்கு நோன்பு துறக்க விதியாக்கப்பட்ட நேரம் வந்து விட்டமையால் நமது உணவைத் தேடிக் கொள்வோம் எனும் சிந்தனையில் இஃப்தாரை விரைவுபடுத்த வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி