ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை கூட்டும்படி பிரதமருக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு மனு

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை கூட்டும்படி பிரதமருக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு மனு

காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்டும்படி, பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதி மன்றில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய் துள்ளது.

மனுவில், தமிழக அரசு கூறியுள்ளாவது, நடப்பு பாசன ஆண்டில் (2012-13), கர் நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இருந்தாலும், கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும், ஜூலை 20ம் திகதி நிலவரப்படி 21.9 டி. எம். சி. தண்ணீர் பெறப்பட்டு உள்ளது.

ஆனாலும் காவிரி கண்காணிப்பு கமிட்டி உருவாக்கிய பார்முலாவின்படி இடர்பாடு காலங்களில், தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரவில்லை. அதற்குப் பதிலாக அணைகளில் தண்ணீரை சேமிக்கத் துவங்கியுள்ளது.

பாசனத்திற்காக கிருஷ்ணராஜசாகர் கால்வாய்களிலும் தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதனால் காவிரி நடுவர மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி தங்களுக்குரிய தண்ணீரை பெற முடியாத நிலையில் தமிழகம் உள்ளது.

குறுவை பாதிப்பு காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி பார்த்தால் தமிழ கத்திற்கு ஜுலை 20ம் திகதி வரை, 36.15 டி. எம். சி. தண்ணீரை கர்நாடகா தரவேண்டியுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால், மேட்டூர் அணையை வழக்கமான நடைமுறைப்படி ஜூன் 12ம் திகதி திறக்க முடியவில்லை. தண்ணீர் திறக்கப்படாததால், குருவை சாகுபடியும் நடக்கவில்லை. தங்கள் மாநில அணைகளில் தண்ணீரை தேக்கி வைப்பதற்குப் பதிலாக கிடைக்கும் தண்ணீரை தமிழகத்திற்கும் கர்நாடக அரசு பகிர்ந்து அளிக்க வேண்டும்.

குறிப்பாக இடர்பாடு காலங்களில், இதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேட்டூர் அணை தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் ஒரு போக சம்பா பயிரையாவது விளைவிக்க முடியும்.

இடர்பாடு காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு கமிட்டி உருவாக்கிய பார்முலாக்களை, கர்நாடக அரசு பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ள வில்லை. அதை ஏற்றுக்கொள்ளும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுவதோடு, காவிரி நதிநீர் ஆணையம் தன் சட்டபூர்வ மான கடமையைச் செய்ய அந்தக் கூட்டத்தை கூட்டும்படியும் பிரதமருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி