தமிழ், சிங்கள மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தும் சித்திரைப் புத்தாண்டு
தமிழ், சிங்கள மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தும் சித்திரைப் புத்தாண்டு
இராசையா மகேஸ்வரன்
(சிரேஷ்ட துணை நூலகர், பேராதனை பல்கலைக்கழகம்)
வசந்த காலத்தில் புத்தாண்டு மலர்கிறது. இது மலர்கள் மலர்ந்து பூத்துக்குலுங்கும்
காலம் அத்தோடு தமிழ், சிங்கள மக்கள் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை.
தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் இரு இனங்களும் ஒன்றிணைந்து கொண்டாடும்
விழாக்களும் உள்ளன. இவை எமது நாட்டிற்கே தனித்துவ மானவையாகும். இக்காலத்தில்
விளையாட்டுகள், வேடிக்கைகளும் சிறப்பிடம் பெறுகின்றன.
புத்தாண்டில் முக்கியமாக இடம்பெறும் விளையாட்டுகளில் ஊஞ்சல் ஆட்டம், போர்த்தேங்காய்
உடைத்தல், மாடு பிடித்தல், சடுகுடு என்பன முக்கியமானவை. சித்திரைப் புத்தாண்டு
விளையாட்டுப் போட் டிகளில் மரதன், வழுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, கயிறு
இழுத்தல், கண்கட்டி முட்டி உடைத்தல் போன்றவற்றை தமிழ், சிங்கள மக்கள் இரு சாராரும்
மேற்கொள்கின்றனர்.
இது போலவே தெய்வ வழிபாடு, பலகாரம் பட்சணங்களுடன் உறவினரை, நண்பர்களை உபசரிப்பது,
உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது, பெரியோரை வணங்குதல், புத்தாடை அணிதல்,
புத்தாண்டுக்கு முன் வீட்டை சுத்தம் செய்து சுண்ணாம்பு அல்லது பூச்சு பூசுதல் பழையன
கழிதல், புதியன புகுதல் ஆகிய மரபுகளை இரு சாராரும் கடைப்பிடிக்கின்றனர். பட்டாசு
கொளுத்தல், மத்தாப்பு எரித்தல் ஆகியனவும் சிங்கள, தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படும்
கொண்டாட் டங்களாகும்.
புண்ணிய காலத்தினை அறிந்து சங்கிரம தோஷ நிவர்த்திக்கு மருத்து நீர் வைத்து நீராடி
மக்கள் புத்தாடை அணிகிறார்கள். இந்த மருத்து நீர் ஆலயங்களில் தாமரைப் பூ, தாழம்பூ,
விஷ்ணு கிராந்தி, மாதுளம்பூ, சீதேவியார் செங்கழு நீர், வில்வம் இலை, பீர்க்கு,
அறுகு, மிளகு, சுக்கு, திப்பிலி, கோரோன், பால், கோசலம், கோமயம், மஞ்சள் ஆகியன
கொண்டு சிவாச்சாரியார்களினால் அல்லது ஊர்ப் பெரியோர்களினால் காய்ச் சப்பட்டு
மக்களுக்கு வழங்கப்படு கிறது.
மருத்துநீர் பெரியோர்களின் கரங்களினால் சிரசில் வைக்கப்படும். தமிழர்கள் தங்களது
வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போடுகின்றனர். தென்னங் குருத்துகள், மாவிலைகள் கொண்டு
அலங்கரிக்கின்றனர். வீட்டிலும், கோயிலிலும் பொங்கல் பொங்குகின்றனர். சூரிய
பகவானுக்குப் படைக்கின்றனர். தெய்வத்திற்கும் படைக்கின்றனர்.
புத்தாண்டு பிறக்கும் போது ஆலயங்களில் "சங்கராந்தி தீர்த்தம்" இடம்பெறும். அதன்
பின்னர் பொங் கல் வைப்பர். சிலர் சூரிய உதயத்தின் போது பொங்கல் வைப்பர்.
சித்திரைப் பண்டிகையில் கை விசேடம் முக்கியமானது. வெற்றிலை, பழம், நெல், பூ,
மஞ்சள்துண்டு ஆகிய வற்றில் பணத்தை வைத்து வீட்டிலு ள்ள பெரியவரால் சகலருக்கும்
கைவிசேடம் வழங்கப்படுகிறது. அதுபோல் குறித்த நேரத்தில் புதுக் கணக்கு புதுப்
புத்தகத்தில் "பிள்ளையார் சுழி" போட்டு தொடங் கப்படுகிறது.
நல்ல நேரம் பார்த்து கைவிசேடம் வழங்கல், வர்த்தக நிலையங்களில் முதல் வியாபாரம்
செய்தல், வர்த்தக நிலையங்களில் முதல் பூசை செய்தல் போன்றன இந்துக்களினால்
பின்பற்றப்பட்டு வருகின்றன.
இறந்த உறவினர்களை நினைத்து பூசை செய்து புதுவருட பட்சணங் களைப் படைத்து வழிபடும்
முறை சிலரிடம் காணப்படுகிறது. தமிழர் முறுக்கு, வடை, பாசிப்பயறு பலகாரம் தயாரித்து
விருந்தினருக்கு வழங்குவர்.
பெளத்தர்கள் புதுவருடம் முடிந்த பின் நல்ல நாள், நேரம் பார்த்து தலைக்கு எண்ணெய்
வைக்கும் வைபவத்தினை, ஒழுங்கு செய்கி ன்றனர். இவர்களும் பஞ்சாங்கம் பார்த்து
எண்ணெய் பூசுவர். பெரியோர்களினால் இவ்வைபவம் நடத்தப்படும். பின்னர் நீராடி புதிய
கணக்குத் தொடங்குகின்றனர். எண்ணெய் பூசும் வரை எந்த தொழிலிலும் சிங்கள மக்கள்
ஈடுபடாதிருப்பது சம்பிரதாயம் ஆகும்.
பெளத்தர்கள் தலதாமாளிகை மற்றும் முக்கிய விகாரைகளை தவிர "தேவாலய" என அழைக் கப்படும்
இந்து தெய்வ கோயில் களுக்கும் சென்று வழிபடுகின்றனர். முருகன் ஆலயத்தை கதரகம தேவாலய
என்றும், சிவன் ஆலயத்தை சிவதேவாலய என்றும், விஷ்ணு ஆலயத்தை விஷ்ணு தெய்யோ தேவாலய
என்றும், பிள்ளையார் கோயிலை கணதெய்யோ தேவாலய என்றும் பெளத்தர்கள் வழிபடுகின்றனர்.
இது சிங்கள, தமிழ், மக்கள் மத்தியில் பூர்வீக காலம் தொட்டு நிலவி வரும்
சம்பிரதாயமாகும். சிங்களவர்களின் சித்திரை வருடப் பிறப்பு கொண்டாட்டத்தில் "றபான்"
அடித்தல் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஊரில் பெண்கள் ஒன்றிணைந்து றபான்
அடிப்பார்கள். இதில் பல்வேறு ஓசை, செய்திகள் உள்ளன. றபான் அடித்தல் போட்டிகளும்
நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும். அது போல் தாயம் விளையாடல், "சோகி போடுதல்",
"பம்பரம் விடுதல்" ஆகியனவும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள புத்தாண்டுக் கொண்டாட்ட
நிகழ்வுகளாகும்.
சிங்கள மக்கள் புதுவருட சிறப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பலகாரம்
ஆயத்தப்படுத்துவர். ஒரு வீட்டில் பலகாரம் சுடும் போது பக்கத்து வீட்டுக்காரர்கள்
உதவிக்கு வந்து விடுகின்றனர். நேரம் பார்த்து பலகார சட்டியினை அடுப்பில் வைக்கும்
வழக்கமும் உண்டு. இதனை எண்ணெய்ப் பாத்திரம் அடுப்பில் வைக்கும் நேரம் என
அழைக்கின்றனர்.
இவர்கள் புண்ணிய காலம் முடிந்த பின்னர் கிணற்றில் நீர் எடுத்து அடு ப்பை மூட்டுவர்.
எனவே சாப்பாட்டை கைவிடும் நேரம், அடுப்பை பற்றும் (மூட்டும்) நேரம், மீண்டும்
உண்ணும் நேரம் என பல்வேறு நல்ல நேரங்கள் உள்ளன. இந்த நல்ல நேரங்களில் பட்டாசு
கொளுத்தி மகிழ்வுருவதோடு, நல்ல நேரத்தினை மற்றோருக்கும் ஞாபகமூட்டு கின்றனர்.
இரு சமூகங்களுக்கிடையில் பண் டிகைக் கொண்டாட்டத்தில் சிறிய மாறுபாடுகள் இருந்த
போதிலும், இணைந்து கொண்டாடும் ஒரு வருடப் பிறப்பே தமிழ், சிங்கள புதுவருடம் ஆகும்.
இவ்வாறு இணைந்து புதுவருடம் கொண்டாடுவது இரு சமூகங்களுக்கு மிடையிலான ஐக்கியத்தை
வலி யுறுத்துவதாக அமைகிறது. இப் புத்தாண்டானது ஆனந்த வாழ்வை இரு சமூகத்திற்கும்
தரக்கூடிய வகையில் சிறப்பான ஆண்டாக மலர வேண்டுமென்பதே அனைவரின தும்
பிரார்த்தனையாகும். எமது துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், ஒரு சமூகம் மீது மற்ற
சமூகத்தின் சந்தேகப் பார்வை அனைத்தும் நீங்கி நிரந்தர நிம்மதி நிலவ வேண்டும்.
இதற்காக சகலரும் பிரார்த்திப்போமாக!